சேலம், பிப்.7: தேசிய அளவிலான கால்பந்து போட்டியில், நோட்ரிடேம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்திய விளையாட்டு கழகத்தின் சார்பில், காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழக கால்பந்து அணியில், சேலம் குண்டுக்கல்லூர் நோட்ரிடேம் ஆப் ஹோலிகிராஸ் பள்ளி மாணவர்கள் ஹரிராம், சத்ரபதி, அஜய், அலெக்டீனோசேவியர், முபசீர் ஆகியோர் பங்கேற்று விளையாடி, தமிழக கால்பந்து அணியை வெற்றி பெற வைத்தனர். தமிழக அணி வீரர்களுக்கு வெற்றிக்கோப்பையும், பதக்கங்களும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. தேசிய போட்டியில், தமிழக அணியில் பங்கேற்று சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சியாளரையும், பள்ளி உடற்கல்வி இயக்குனருமான ஆரோக்கியராஜையும், பள்ளி முதல்வர் அருட்சகோதரர் பாலசாமி, நிர்வாகி சாக்கோ மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.